Tuesday, February 8, 2011

புதிய ஸ்பெக்ட்ரம் முறைகேடு? - இரண்டாம் பாகம்

நேற்று என்னுடைய இந்த பதிவில் ISRO நிறுவனத்திற்கும், தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கும் இடையில் உருவான முறைகேட்டிற்கு வாய்ப்பிருக்கக் கூடிய ஒப்பந்ததைப்  பற்றி எழுதியிருந்தேன். இன்று நாளிதழ்களில்  இதைப் பற்றி சில மேலதிகத் தகவல்கள் வந்துள்ளன.

தேவாஸ் நிறுவனம் ஹிந்து பத்திரிகை வெளியிட்ட செய்தி அறிக்கையை மறுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுக்கு ஏர்டெல், BSNL ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது போல   அலைக்கற்றை உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. ட்ரான்ஸ்பாண்டருடன் 70 MHZ அலைவரிசையையும் சேர்த்துக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ட்ரான்ஸ்பாண்டரும், அலைவரிசையும் ISRO பெயரில்தான் உள்ளது என்கிறது.

இதில் ஒரு அடிப்படையான கேள்வி என்னவென்றால் குத்தகை என்பது ஒரு வருடம், இரு வருடமாக இருந்தால் சரி. ஆனால் இருபது வருடம் எனும்போது அது நிறுவனத்தின் சொத்து போலல்லவா ஆகி விடுகிறது? அப்படி இருக்கும்போது ISRO இந்த அலைக்கற்றைக்குத் தனியே சரியான விலையை ஏன்  நிர்ணயிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசாங்கமும், ISRO வும் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கணக்குத் தணிக்கை பூர்வாங்க நிலையில்தான் உள்ளது. இரண்டு லட்சம் கோடி இழப்பு என்பது ஒரு தோராயமான கணக்கு. இறுதி அறிக்கை வெளியிடும்போது அனைத்துத்  தகவல்களும் துல்லியமான முறையில் வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறது.

பா.ஜ.க வும், கம்யூனிஸ்ட்களும் இந்த விவகாரத்தையும்  பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் இணைக்க வேண்டுமென்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த வருட நிதிநிலை அறிக்கைக்  கூட்டத் தொடரை இந்த  விவகாரம்  வீணடித்து விடுமென்றே தோன்றுகிறது.

Monday, February 7, 2011

புதிய ஸ்பெக்ட்ரம் முறைகேடு?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் பெரிதாக வெடித்திருக்கும் இந்நேரத்தில் அதை விடப் பெரிய அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு  ஒன்றை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) விசாரிக்க ஆரம்பித்துள்ளது. முதல்கட்ட மதிப்பீட்டின்படி அரசுக்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு லட்சம் கோடி எனப்படுகிறது. இது  2G முறைகேட்டில் சொல்லப்படும்  1.76 லட்சம் கோடி இழப்பையும் தாண்டி விட்டது. இந்த முறைகேட்டைப் பற்றிய விவரங்களை  ஹிந்து பத்திரிக்கையின்  பிசினஸ் லைன் நாளிதழ் முதன்முறையாக ஆராய்ந்து வெளியுட்டுள்ளது. போபர்ஸ் முறைகேட்டையும் முதலில் வெளிக்கொண்டு வந்தது ஹிந்து பத்திரிக்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது விவரங்களைப் பார்ப்போம். ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்காக செயற்கைகோள்கள் செலுத்துவது  மட்டுமல்லாமல் தொலை தொடர்புத் துறையில் இயங்கும்   தனியார் நிறுவனங்களிடமும் கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செயற்கைகோள்களின் சில ட்ரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும். அவர்கள் அதைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு சேவைகளை அளிக்கலாம். தனியார்களுக்கு சேவை அளிக்கும் ISRO வின் பிரிவு  ஆண்ட்ரிக்ஸ் என்ற பெயரில் தனி நிறுவனமாக இயங்குகிறது. இந்நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் விண்வெளித் துறையின் கீழ் இயங்குகின்றன. விண்வெளித் துறை என்பது நமது பிரதமர் மன்மோஹன் சிங்கின்  நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை.
 
ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவா'ஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்தோடு 2005 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தப்படி தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் GSAT-6, GSAT-6A என்ற இரு செயற்கைக்கோள்களைச் செலுத்தும். அதில் ஒவ்வொரு செயற்கை கோளிலும் பத்து ட்ரான்ஸ்பாண்டர்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்படும். இதற்காக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு முதல் கட்டமாக நான்கு கோடி டாலரும் செயற்கை கோள்கள் ஏவப்பட்டபின் இருபத்தைந்து கோடி டாலரும் கொடுக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இரு நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் இந்திய விண்வெளித் துறையின் பங்குத் தொகை  எவ்வளவு என்று தெரியவில்லை. செயற்கைக்கோள் ஏவப்பட்டபின் தேவா'ஸ் மல்டி மீடியா மேலும்   வர்த்தக முதலீடுகள் செய்யும்.
 
இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் செயலாளராக பணி புரிந்தவர். சென்ற வருடம் வரை இந்தியாவில் ஒலிபரப்பப்பட்ட வோர்ல்ட் ஸ்பேஸ் செயற்கைக் கோள் வானொலியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்தில் ஜெர்மன் அரசு தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 17 விழுக்காடு பங்குள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டர்  குத்தகைக்கு  வாங்கி என்ன செய்யப் போகிறது?  செயற்கைக்கோள் வழியே அகல உயர் அலைவரிசை (broadband) சேவைகளை அளிக்க இருக்கிறது. உதாரணமாக இந்திய ரயில்வேயிடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் மூலம் இரயில்களைக்  கண்காணித்து ரயில்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறது. மேலும் எதிர்காலத்தில் கம்பியில்லா இணைய  சேவையிலும் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டரை  குத்தகைக்கு  எடுப்பதுடன் விட்டிருந்தால்  எந்த பிரச்சினையும் இல்லை. ஒப்பந்தப்படி இந்நிறுவனத்திற்கு இருபது வருடங்களுக்கு S-band எனப்படும் அதி உயர் அலைவரிசை 70 MHZ அளவுக்குக் கிடைக்கும். இந்த அலைவரிசை   மூன்றாம் தலைமுறை உலா தொலைபேசி  அலைக்கற்றையை   விடப்   பெரிய அலைவரிசையில் அமைந்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஏலத்தில்  15 MHZ ஏலம் விட்டதற்கே அறுபத்தி ஏழாயிரம் கோடி வருமானம் கிடைத்தது.சமீபத்தில் BSNL மற்றும் MTNL ஆகிய  அரசு நிறுவனங்கள் 20 MHZ S-band அலைக்கற்றையை  பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இவ்வளவு மதிப்பு மிக்க அலைக்கற்றை  70 MHZ அளவிற்கு தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு மட்டும் ட்ரான்ஸ்பாண்டருக்காகக்   கொடுத்த  குத்தகைத் தொகை  ஆயிரம் கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு  ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்று ஒதுக்கப்படும் அலைக்கற்றையை வேறு யாருக்கும் மேற்கொண்டு விற்கக்கூடாது என்ற விதியும் ஒப்பந்தத்தில் இல்லை.
 
இது போதாதென்று சொன்ன நேரத்தில் செயற்கைக்கோளைச்   செலுத்தாவிடில் இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம்  அந்நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டுமென்பது ஒப்பந்தம். இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் போட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் வழக்கம் போல சொன்னபடிச் செயற்கைக்கோளைச்   செலுத்தாதால் இப்போது கையைப் பிசைந்து கொண்டுள்ளது. தனக்குப் பதிலாகச் செயற்கைக்கோளைச் செலுத்துமாறு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திடம் பேரம் பேசி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே பரிசோதனை செய்து பார்க்கவும் சிறிது அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.
 
இப்போது மத்திய கணக்குத் தணிக்கைக் குழு சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன?
 
(1) மதிப்பு மிக்க அலைக்கற்றை வெளிப்படையான ஏல முறை இல்லாமல் விற்கப்பட்டுள்ளது.
(2) பிரதமர், மத்திய அமைச்சரவை ஆகியவற்றுக்கு ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் சொல்லப்படவில்லை.
(3) தனியார் தரும் சொற்பத் தொகைக்காக் பொது நிதியை வைத்து செயற்கைக்கோள்  தயாரிப்பது.
(4) இந்நிறுவனம் இந்த அலைக்கற்றையை  வேறு யாரிடமாவது கைமாற்றி விடாமல் இருக்க ஒப்பந்தத்தில் வழிவகை இல்லாதது.
 
இவ்விவகாரம் வெளிவந்தவுடன் மத்திய அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இந்திய விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனத்திற்கு  அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்திற்காக மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.
 
இந்தியாவில் மத்திய தணிக்கைக் குழு மட்டும்தான் தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறது  போலிருக்கிறது.

Friday, February 4, 2011

இரயில் கூரையில் பயணிகள்

நாமெல்லாம் விஜயகாந்த் படங்களில் இரயில் மேல் சண்டைக்காட்சிகள் பார்த்திருப்போம். ஓடும் இரயில் கூரையில் மனிதர்கள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது பீஹாரில் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் காட்சி.

என் தந்தை தெற்கு இரயில்வேயில் வேலை செய்ததால் ஒவ்வொரு வருடமும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். 1993 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது நேபாள நாட்டுக்குச் சென்றபோது கொல்கத்தாவிலிருந்து பீஹார் வழியே செல்ல நேரிட்டது.

தமிழகத்தில் நாம் பொதுவாக இரயில்கள் சுத்தமாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று குறை கூறுவோம். பீஹாரில் இன்னும் ஒரு படி மேலே போய் பல பெட்டிகளில் விளக்கு வெளிச்சமே இல்லை. இருட்டான பெட்டிகளில் காடு போன்றிருக்கும் பாதையில் பயணம் செய்வது திகிலான அனுபவம். சரி பெட்டிக்குள்தான் வெளிச்சம் இல்லை என்று வழியில் வரும் ஊர்களில் பார்த்தால் பல ஊர்கள் இருளடைந்து காணப்பட்டன. அதைப் பற்றி விசாரித்தபோது பீஹாரில் பல கிராமங்களில் மின்வசதி கிடையாதென்றும் இருக்கும் இடங்களில் கூட ஒரு நாளில் பாதி நேரம்தான் மின் வினியோகம் இருக்கும் என்றும் அறிந்தோம். நிதீஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிற்பாடுதான் மின் வினியோகத்தில் சிறிது முன்னேற்றம் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் பீஹார் மக்களில் பலர் அவ்வளவு பொது ஒழுக்கம் கடை பிடிப்பவர்களாக இல்லை. இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறிக் கொண்டு முன்பதிவு செய்தவர்கள் இருக்கையைப் பயன்படுத்த விடாமல் தொல்லை செய்வார்கள். பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் செய்தாலும் பயனில்லை. அவரையும் மிரட்டுவார்கள். ஓரளவிற்கு மேல் பேச முடியாமல் அவரும் நம்மைக் கை விட்டு விட்டுக் கிளம்பி விடுவார். இவர்களில் பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்பவர்களே அதிகம். கேட்டால் இது அரசாங்கத்தின் வண்டி. நான் ஏன் காசு கொடுக்க வேண்டுமென்பார்கள்.

உச்ச கட்டமாக சிறு கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்குப் பயணிக்கும் பலர் தங்கள் மிதிவண்டிகளை இரயிலின் ஜன்னல்கள் இடையே கயிற்றைப் போட்டுக் கட்டி விட்டு இரயிலின் கூரைக்கு இடம் பெயர்ந்து விடுவர். பல தடங்கள் மின்மயமாக்கப் படாதது அவர்களுக்கு வசதியாக இருந்தது. இவர்களுக்கு மேற் கூரையில் போய் தேநீர் விற்கும் வியாபாரிகளும் உண்டு

இந்த கூரையில் பயணிக்கும் பழக்கம் பீகாரில் மட்டும்தான் உண்டு என்று எண்ணியிருந்தேன். உத்தர பிரதேசத்தில் இரு நாட்களுக்கு முன்  ஜம்முதாவி விரைவு வண்டியில்  நடந்த ஒரு விபத்து என் நினைப்பைத் தகர்த்தது. புது தில்லியிலிருந்து லக்னோ செல்லும் வழியிலுள்ள ரோசா எனும் இடத்தருகே கூரையில் பயணம் செய்த பதினான்கு இளைஞர்கள் எதிர்ப்பட்ட  பாலத்தில் தலை மோதி மரணமடைந்தனர். கூரையில் பயணம் செய்த பலர் பரேலியில் நடந்த இந்திய-திபெத் எல்லைக்    காவல் பணிக்காகத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். இரயிலில்  இடமில்லாமல் பலர் என்ஜின் முன்புறம் மற்றும் Gaurd பெட்டி ஆகியவற்றிலும் தொற்றிக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.



ஹிந்து நாளிதழில் இரு நாட்களுக்கு முன் இச்செய்தியைப் பார்த்தபோது ஒரு புறம் வருத்தமாக இருப்பினும் இன்னொரு புறம் இது இவ்வளவு நாள் நடக்காமல் இருந்ததே அதிசயம் என்று தோன்றியது.

Saturday, December 18, 2010

ரத்த சரித்திரம் - திரிக்கப்பட்ட உண்மைகள்

ரத்த சரித்திரம் என்ற பெயரில் ராம் கோபால் வர்மா ஒரு பழிவாங்கல் கதையைப் படமாக எடுக்கப் போகிறார் என்றவுடன்  முதலில் ஆயாசமாக இருந்தது. பின்னர் அது ஆந்திராவில் நடந்த உண்மைக் கதை என்றவுடன் சுவாரசியம் அதிகரித்தது.

பழி வாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு என்ற மகாபாரத  வாசகம்தான் படத்தின் ஒரு வரிக் கதை.

நான் இப்படத்தின் ஹிந்தி-தெலுங்கு முதல் பாகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் இருபதே நிமிடத்தில் அதைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறார் இரண்டாம் பாகத்தில்.

உண்மைக் கதையின் நாயகன் பரிதாலா  ரவி இதில் பிரதாப் ரவியாகப் (விவேக் ஓபராய்) பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். அவருடைய எதிராளி சூரி, சூர்யா (சூர்யா)  என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
இவர்களின் பகையின் முழு விவரம்  அறிய  உண்மைத் தமிழன் அவர்கள் எழுதிய இந்த பதிவை வாசிக்கவும்:
http://truetamilans.blogspot.com/2010/12/blog-post_06.html

பரிதாலா ரவி ஆந்திர அரசியலில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர். அவருடைய தந்தை  ஒரு பண்ணையாரிடம் மேலாளர் வேலை பார்த்தாலும்  நக்சல் போராளிகளுடன் சேர்ந்து  தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் பண்ணையார்களால் கொல்லப்படுகிறார். பின்னர் பரிதாலா  ரவியின் அண்ணன் நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டதால் காவல் துறையால் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார். 

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த பரிதாலா ரவி நக்சல் இயக்கத்தில் சேர்கிறார். நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரவிக்கு உதவுவதற்காக அவருடைய  தந்தை வேலை செய்த  பண்ணையார்  மற்றும் சட்டசபை உறுப்பினரான கங்குல நாராயண ரெட்டியைக்  கொல்கின்றனர். இவருடைய மகன்தான் சூரி எனப்படும் சூர்ய நாராயண ரெட்டி.  கங்குல நாராயண ரெட்டி கொலை செய்யப்பட்டபின் அவருடைய ஆதரவாளர்கள் பலரைப் பரிதாலா ரவியின் ஆதரவாளர்கள் பரலோகம் அனுப்பினர். இதற்குப் பயந்து மகன் சூரி கர்நாடகா செல்கிறார். சூரி மீது சில கற்பழிப்பு புகார்களும் உண்டு. இந்த அழித்தொழித்தல் பணியில் சூரியின் ஆட்களும் அவ்வப்போது ரவிக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒருமுறை ரவியின் ஆட்கள் சூரியின் வீட்டு TV பழுதானபோது அதைச் சரி செய்ய வெளியே கொடுத்திருந்தபோது அதில் ரிமோட் கண்ட்ரோல் குண்டை வைத்து அனுப்பி விடுகின்றனர். சூரி மனைவியோடு வீட்டுக்கு வெளியிலிருந்ததால் தப்பித்து விடுகிறார். அவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் மாண்டு போகின்றனர். இதற்குப்  பழி வாங்குவதற்காக ரவியைக் கொல்ல சூரி முயல்வதும் பல தோல்விகளுக்குப் பின் அவர் வெற்றி அடைவதும்தான் உண்மைக் கதை. ரிமோட் கண்ட்ரோல் குண்டு சம்பவத்துக்குச் சில வருடங்கள் கழித்து  என்.டி.ராமராவ் அழைப்பின் பேரில் பரிதாலா ரவி அரசியலில் நுழைந்து அமைச்சராவது தனிக்கதை. 

ரத்த சரித்திரம் இரண்டாம் பாகத்தில் நான் காணும் குறைகள்:
(1) சூர்யாவை நாயகனாகக் காட்ட வேண்டுமென்பதற்காக உண்மைக் கதையில் சூரி மேலுள்ள கற்பழிப்பு புகார்கள், அராஜகங்கள் ஆகியவற்றை மறைத்து விட்டு கண்ணியமானவராகக்  காட்டியிருப்பது.
(2) சூரியின் அப்பா கங்குல நாராயண ரெட்டியை சிறிது நல்லவராகக் காட்ட முயற்சிப்பது. 


முதல் முறையாக இரு எதிர் நாயகர்களுக்கு இடையில்   நடக்கும் மோதல்களைப் பார்க்கலாம் என்றிருந்தேன். ராம் கோபால் வர்மா புண்ணியத்தில் அது வழக்கமான பழிவாங்கல் கதையாகி விட்டது.

விவேக் ஓபராயின்  நடிப்பு சூர்யாவை விட இயல்பாக இருந்தது. அவரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தேவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியா மணிக்கு அவ்வளவு வாய்ப்பில்லை இக்கதையில்.

இப்படத்தில் தரம்-சந்தீப்பின்  இசையும் பாடல் வரிகளும் மிகச் சிறப்பாக உள்ளன. குறிப்பாக கத்திகளின் சகவாசம், சாத்தானின் சூதாட்டம், கொல்லடா ஆகிய பாடல்கள் அருமை. இசையை ஒழுங்காக விளம்பரப் படுத்திருந்தாலே படம் வணிக ரீதியாக கொஞ்சம் சாதித்திருக்கும். பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது நல்ல உத்தி. வேறு இயக்குனர் எடுத்திருந்தால் பரிதாலா ரவி ஆடிப் பாடும்  ஒரு குத்துப் பாட்டு நிச்சயமாக இருந்திருக்கும்.

இப்படத்தின் வன்முறை பொறுக்க முடியாமல் சிலர் பாதி படத்திலேயே திரையரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர். உண்மைக் கதை இதை விட வன்முறை நிறைந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

Monday, July 12, 2010

மதராசப்பட்டினம் - திரை விமர்சனம்


வெகு நாட்கள் கழித்து மனநிறைவை அளித்த திரைப்படம். பிறந்ததிலிருந்தே சென்னைவாசியான நான் இப்படத்தை மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

1944-47 வரையிலான காலகட்டத்தில் சென்னையில் ஒரு காதல் கதையை மிக அழகாகக் காட்டியுள்ளார் இயக்குனர் விஜய். படத்தில் சுதந்திரப் போராட்டமும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் படம் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியல்ல.

விளம்பரங்களை வித்தியாசமாக அமைத்து எதிர்பார்ப்புகளையும், சுவாரசியங்களையும் தூண்டி அதைப் பெரும்பாலும் பூர்த்தியும் செய்துள்ளார் இயக்குனர்.

டைட்டானிக், லகான் படங்களின் பாதிப்புகள் ஆங்காங்கே சிறிது தென்படுகிறது. ஆர்யா தேவையான அளவுக்கு நடித்துள்ளார். படத்தில் மனத்தைக் கவர்பவர் கதாநாயகியாக நடிக்கும் ஆங்கிலேயர் ஏமி ஜாக்சன் தான். இவர் தமிழுக்கு வாயசைத்துள்ளது நமது வழக்கமான தமிழ் கதாநாயகிகளை விட நன்றாகப் பொருந்துகிறது.

கூவம் நதியும், சென்னை நகரமும் எவ்வளவு அழகாக இருந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பின் நாம் அவற்றை எந்த அளவுக்கு சீர்கேட்டுக்கு உள்ளாக்கியுள்ளோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு நதி இருந்தது என்பதற்கான சுவடுகளையே அழித்து விட்டோம்.

பக்கிங்காம் கால்வாய்,கூவம் நதி, சென்ட்ரல் ரயில் நிலையம், வால் டாக்ஸ் சாலை, எல்பின்ஸ்டன் திரையரங்கம், வண்ணாரப்பேட்டை, அந்த கால ட்ராம், ஸ்பென்சர் தற்போது இருக்குமிடத்தில் இருந்த பிரிட்டிஷ் கட்டிடம் எனப் பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அற்புதம்.

ஏமி ஜாக்சன் ஆர்யாவிடம் காதலை வெளிப்படுத்த முயல்வது கவிதை. ஆர்யா ஆங்கிலம் கற்கும் கட்சிகள் நல்ல நகைச்சுவை. மறைந்த கொச்சின் ஹனீபாவும் தன பங்கைச் சிறப்பாக ஆற்றியுள்ளார்.

ஜி.வீ.பிரகாஷின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பூக்கள் பூக்கும் தருணம் பாடல் அருமை. வாம்மா துரையம்மா பாடல் உண்மையான சிங்காரச் சென்னையைக் காட்டுகிறது.

சில குறைகளும் இல்லாமல் இல்லை. இடைவேளைக்குப் பின் வரும் ஒரு டூயட்டை தவிர்த்திருக்கலாம். மேலும் வண்ணாரபேட்டை வட சென்னையின் முக்கிய பகுதி. அங்கிருக்கும் பிரத்யேக வட்டார வழக்குத் தமிழைப் பயன்படுத்தாமல் வழக்கமான பேச்சுத் தமிழையையே பயன்படுத்தியிருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ஆர்யாவின் உடை லகான் படத்தைப் போலவே அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் இடைவேளையே கிளைமாக்ஸ் போல தோற்றமளித்தது. அதன் பின் ஜெயம் படம் போல நீண்ட கிளைமாக்ஸ் ஆகிவிட்டார் இயக்குனர். இரண்டாம் பாதியில் எடிட்டிங்கில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

தமிழ்த் திரையுலகம் ஆரோக்யமான பாதையில் பயணம் செய்வதற்கான அறிகுறிகள் மதராசப்பட்டினம் மற்றும் களவாணி படங்கள் மூலம் தெரிகிறது. அஜீத், விஜய் படங்கள் வெற்றி பெற்று அதைக் கெடுக்காமல் இருந்தால் சரி.

Saturday, September 19, 2009

தூர்தர்ஷனும் நானும்

தூர்தர்ஷன் பொன்விழா காணும் இத்தருணத்தில் தூர்தர்ஷன் பற்றிய என் நினைவுகளின் தொகுப்பு:

தூர்தர்ஷன் எனக்கு முதன்முதலில் பரிச்சயமானது 1985 ஆம் ஆண்டில் எனக்கு நான்கு வயதிருக்கும்போது. அகத்தியர் படத்தை ஞாயிறு மாலை பார்த்த ஞாபகம். அன்று மதியம் பூவே பூச்சூடவா படத்துக்கு உறவினர்களோடு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அகத்தியர் ஓடிக்கொண்டிருந்ததாக நினைவு.

அக்காலகட்டத்தில் என்னைக் கவர்ந்தவை ஹார்லிக்ஸ், காம்ப்ளான் விளம்பரங்கள். மேலும் பதிமூன்று வார தொடர்கள் தூர்தர்ஷனின் சிறப்பம்சம். கதை முடிகி்றதோ இல்லையோ பதிமூன்றாம் வாரம் நிறுத்திவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள். எனக்கு நினைவில் நிற்பவை சிவசங்கரி எழுதி ரகுவரன் நடித்த இது ஒரு மனிதனின் கதை, மௌலியின் Flight 172, அமாவாசை IAS தொடர்கள், எஸ்.வீ. சேகரின் நம் குடும்பம், வண்ணக் கோலங்கள், பாலச்சந்தரின் ரயில் ஸ்நேகம் ஆகியவை. மேலும் பேபி ஷாலினியும், பேஞ்சோ என்ற பூதமாக ஒரு விரல் கிருஷ்ணாராவும் நடித்த ஒரு குழந்தைகள் தொடர் எனக்குப் பிடித்தமான ஒன்று. பஞ்சு, பட்டு, பீதாம்பரம், அப்புசாமி, சீதா பாட்டி நாடகங்கள், கிரேசி மோகன், கோவை அனுராதா நாடகங்களும் சிறப்பானவை. இவற்றில் மௌலியின் தூர்தர்ஷன் நாடகங்களும், எஸ்.வீ.சேகரின் தூர்தர்ஷன் நாடகங்களும் இப்போது குறுந்தகடுகளாகக் கிடைப்பது சிறப்பான விஷயம். கடைசியாக நான் விரும்பிப் பார்த்த தொடர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா.

வீட்டில் தொலைக்காட்சி இருந்தாலும் நண்பர்களோடு அவர்கள் வீடுகளில் கூடி உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தது மறக்க முடியாத அனுபவங்கள்.

ராமாயணம் தொடர் 1987/ 1988 ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டபோது மொழி புரியாவிட்டாலும் கூட எவ்வளவு ஆவலுடன் பார்த்தோம் என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

மேலும் அப்போது பார்த்த Giant Robot, Invisible man, Non-stop nonsense ஆகிய ஆங்கிலத் தொடர்கள் என்றும் நினைவில் நிற்பவை.

ஒளியும், ஒளியும், ஞாயிறு மாலை தமிழ் படம், திரைமலர், ஞாயிறு மதியம் ஒளிபரப்பப்பட்ட விருதுத் திரைப்படங்கள், ஹிந்தி பாடல்கள் உடைய சித்ரஹார் ஆகியவையும் சிறப்பான நிகழ்ச்சிகள்.

1990 களின் தொடக்கத்தில் மெட்ரோ அலைவரிசை என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டபோது தூர்தர்ஷன் வணிகப்பாதைக்கு நகர்ந்தது. அதிலும் பல சிறப்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் மெட்ரோ ப்ரியா என்ற தொகுப்பாளினி இன்றைய பிரபலமான தொகுப்பளினிகளின் முன்னோடி. Super hit muqabla என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது.

ஜுனூன், அஜ்னபி, தர்த் ஆகிய தொடர்கள் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டாலும் சிறப்பான தொடர்கள். ஜுனூன் முடிவு என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை.

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, தொலைக்காட்சியை வைத்துதான் துப்பு துலக்கப்பட்டதோ என்று எண்ணுமளவிற்கு அவ்வளவு பரபரப்பைக் கிளப்பியது.

அரசியல் தலைவர்கள் மறைவின்போது தூர்தர்ஷன் ஒரு வாரம் கடைபிடிக்கும்துக்கம் உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு முறை ஜெயகாந்தன் கூட என் வீட்டுக்குள் வந்து அழ உனக்கு யார் உரிமை கொடுத்தது என்று கேட்டார். இப்போதும் தூர்தர்ஷனில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

தூர்தர்ஷனில் கிரிக்கெட், ஒலிம்பிக் பார்த்ததும் இனிய அனுபவங்கள்.

அப்பொழுதிருந்த டி.வி. ஆன்டெனாக்கள் இப்போது எங்கு போயின என்பது வியப்பையளிக்கிறது. நெக்ரோபேண்ட் சொன்னது: எதிர்காலத்தில் வானத்தில் செல்வதெல்லாம் கம்பியில் செல்லும். கம்பியில் செல்வதெல்லாம் வானத்தில் செல்லும். தொலைக்காட்சி கம்பிக்கு வந்தது. தொலைபேசி காற்றுக்குப் போனது. நாம் ஒரு காலமாற்றத்தின் சாட்சிகளாக இருந்திருக்கிறோம்.

நான் பள்ளியில் படிக்கும்போது கண்மணிப் பூங்கா நிகழ்ச்சியில் பாரதி வேடம் போட்டுப் பங்கு பெற்றது என் முதலும், கடைசியுமான தொலைக்காட்சி அனுபவம். அந்நிகழ்ச்சி 1990 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து 1991 ஆம் ஆண்டு பாரதியார் நினைவு தினத்தில்(Sep 11) ஒளிபரப்பப்பட்டது. என் பாட்டி அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறாமலேயே இறந்து போனது ஒரு சோகமான நிகழ்வு.

1995 ஆம் ஆண்டு எங்கள் வீட்டுக்கு கேபிள் தொலைக்காட்சி வந்தபோது எங்களுக்கும் தூர்தர்ஷனுக்கும் இருந்த தொடர்பு அறுந்தது. ஆனால் மெகா சீரியல்களால் மூழ்கடிக்கப்பட்டு மூச்சு திணறும் நேரங்களில் தூர்தர்ஷனை நினைத்துப் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. தேவையான அளவுக்கு, தேவையான நேரங்களில் நிகழ்ச்சிகளை எப்படி ஒளிபரப்ப வேண்டுமென்பதை தனியார் தொலைக்காட்சிகள் தூர்தர்ஷனிடம்தான் பாடம் கற்க வேண்டும்.

இப்பொழுதும் எங்கள் வீட்டில் தூர்தர்ஷனைப் பற்றி பேசும்போது நம்ம டிடி என்று சொல்கிறார்கள். இந்தப் பெயரை எந்தத் தனியார் தொலைக்காட்சியாலும் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.

Monday, August 17, 2009

என்னாலியலும்

என் நண்பர் எழுதிய என்னைக் கவர்ந்த ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

நான் உங்கள் நண்பன்.
உங்கள் வாழ்வின் இடர்களையும், சந்தேகங்களையும்,
பயங்களையும் தீர்க்க என்னாலியலாது.
ஆனால் நீங்கள் சொல்வதைச் செவிமடுக்க என்னாலியலும்.
நாமிருவரும் இணைந்து விடைகளைத் தேடுவோம்.

உங்கள் மனவேதனையும், வலியும் மிகுந்த
இறந்த காலத்தை மாற்ற என்னாலியலாது.
சொல்லபடாத கதைகளையுடைய
எதிர்காலத்தையும் கணிக்க என்னாலியலாது.
ஆனால் இப்பொழுது உங்களுடனிருந்து
அரவணைக்க என்னாலியலும்.

உங்கள் கால் தடுப்பதைத் தடுக்க என்னாலியலாது.
நீங்கள் விழாமல் பற்றிக்கொள்ளக்
கைகொடுக்க மட்டுமே என்னாலியலும்.

உங்கள் மகிழ்ச்சிகளும், வெற்றிகளும் என்னுடையவையல்ல.
ஆனாலுங்கள் சிரிப்பில் பங்குகொள்ள என்னாலியலும்.

உங்கள் வாழ்க்கையின் முடிவுகளை
நானெடுக்கவோ, எடைபோடவோ மாட்டேன்.
உங்களுக்குத் துணையாயிருந்து, ஊக்குவித்து,
நீங்கள் கேட்பின் உதவுவது மட்டுமே என்னாலியலும்.

நீங்கள் நட்பிலிருந்தோ, உங்கள் மதிப்பீடுகளிலிருந்தோ,
என்னிடமிருந்தோ விலகுவதைத் தடுக்க என்னாலியலாது.
உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து, உங்களோடு பேசி,
உங்களுக்காகக் காத்திருக்க மட்டுமே என்னாலியலும்.

உங்களுக்காக வரையுறுத்த எல்லைகளை
வழங்க என்னாலியலாது.
ஆனால் நீங்கள் மாறுவதற்கும், வளர்வதற்கும்,
நீங்களாகவே இருப்பதற்குமானவிடத்தை வழங்க என்னாலியலும்.

உங்கள் இதயம் காயப்படாமல், உடையாமல்
காக்க என்னாலியலாது.
ஆனால் உங்களோடு சேர்ந்தழுது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைக்கொண்டு வர என்னாலியலும்.

Original version:

"I'll BE YOUR FRIEND
I can't give solutions to all of life's problems, doubts, or fears.
But I can listen to you, and together we will search for answers.

I can't change your past with all it's heartache and pain,
nor the future with its untold stories.
But I can be there now when you need me to care.

I can't keep your feet from stumbling.
I can only offer my hand that you may grasp it and not fall.

Your joys, triumphs, successes, and happiness are not mine;
yet I can share in your laughter.

Your decisions in life are not mine to make, nor to judge;
I can only support you,encourage you, and help you when you ask.

I can't prevent you from falling away from friendship,
from your values, from me.
I can only pray for you,talk to you and wait for you.

I can't give you boundaries, which I have determined for you,
but I can give you the room to change,room to grow, room to be yourself.

I can't keep your heart from breaking and hurting,
but I can cry with you and bring a smile back on ur faceeeeeeee!!!