Monday, February 7, 2011

புதிய ஸ்பெக்ட்ரம் முறைகேடு?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் பெரிதாக வெடித்திருக்கும் இந்நேரத்தில் அதை விடப் பெரிய அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு  ஒன்றை மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (CAG) விசாரிக்க ஆரம்பித்துள்ளது. முதல்கட்ட மதிப்பீட்டின்படி அரசுக்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு லட்சம் கோடி எனப்படுகிறது. இது  2G முறைகேட்டில் சொல்லப்படும்  1.76 லட்சம் கோடி இழப்பையும் தாண்டி விட்டது. இந்த முறைகேட்டைப் பற்றிய விவரங்களை  ஹிந்து பத்திரிக்கையின்  பிசினஸ் லைன் நாளிதழ் முதன்முறையாக ஆராய்ந்து வெளியுட்டுள்ளது. போபர்ஸ் முறைகேட்டையும் முதலில் வெளிக்கொண்டு வந்தது ஹிந்து பத்திரிக்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இப்போது விவரங்களைப் பார்ப்போம். ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்காக செயற்கைகோள்கள் செலுத்துவது  மட்டுமல்லாமல் தொலை தொடர்புத் துறையில் இயங்கும்   தனியார் நிறுவனங்களிடமும் கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செயற்கைகோள்களின் சில ட்ரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும். அவர்கள் அதைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு சேவைகளை அளிக்கலாம். தனியார்களுக்கு சேவை அளிக்கும் ISRO வின் பிரிவு  ஆண்ட்ரிக்ஸ் என்ற பெயரில் தனி நிறுவனமாக இயங்குகிறது. இந்நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் விண்வெளித் துறையின் கீழ் இயங்குகின்றன. விண்வெளித் துறை என்பது நமது பிரதமர் மன்மோஹன் சிங்கின்  நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை.
 
ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவா'ஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்தோடு 2005 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தப்படி தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் GSAT-6, GSAT-6A என்ற இரு செயற்கைக்கோள்களைச் செலுத்தும். அதில் ஒவ்வொரு செயற்கை கோளிலும் பத்து ட்ரான்ஸ்பாண்டர்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்படும். இதற்காக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு முதல் கட்டமாக நான்கு கோடி டாலரும் செயற்கை கோள்கள் ஏவப்பட்டபின் இருபத்தைந்து கோடி டாலரும் கொடுக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இரு நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் இந்திய விண்வெளித் துறையின் பங்குத் தொகை  எவ்வளவு என்று தெரியவில்லை. செயற்கைக்கோள் ஏவப்பட்டபின் தேவா'ஸ் மல்டி மீடியா மேலும்   வர்த்தக முதலீடுகள் செய்யும்.
 
இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் செயலாளராக பணி புரிந்தவர். சென்ற வருடம் வரை இந்தியாவில் ஒலிபரப்பப்பட்ட வோர்ல்ட் ஸ்பேஸ் செயற்கைக் கோள் வானொலியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்தில் ஜெர்மன் அரசு தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 17 விழுக்காடு பங்குள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டர்  குத்தகைக்கு  வாங்கி என்ன செய்யப் போகிறது?  செயற்கைக்கோள் வழியே அகல உயர் அலைவரிசை (broadband) சேவைகளை அளிக்க இருக்கிறது. உதாரணமாக இந்திய ரயில்வேயிடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் மூலம் இரயில்களைக்  கண்காணித்து ரயில்கள் மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்று கூறுகிறது. மேலும் எதிர்காலத்தில் கம்பியில்லா இணைய  சேவையிலும் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது.
 
இந்நிறுவனம் ட்ரான்ஸ்பாண்டரை  குத்தகைக்கு  எடுப்பதுடன் விட்டிருந்தால்  எந்த பிரச்சினையும் இல்லை. ஒப்பந்தப்படி இந்நிறுவனத்திற்கு இருபது வருடங்களுக்கு S-band எனப்படும் அதி உயர் அலைவரிசை 70 MHZ அளவுக்குக் கிடைக்கும். இந்த அலைவரிசை   மூன்றாம் தலைமுறை உலா தொலைபேசி  அலைக்கற்றையை   விடப்   பெரிய அலைவரிசையில் அமைந்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஏலத்தில்  15 MHZ ஏலம் விட்டதற்கே அறுபத்தி ஏழாயிரம் கோடி வருமானம் கிடைத்தது.சமீபத்தில் BSNL மற்றும் MTNL ஆகிய  அரசு நிறுவனங்கள் 20 MHZ S-band அலைக்கற்றையை  பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இவ்வளவு மதிப்பு மிக்க அலைக்கற்றை  70 MHZ அளவிற்கு தேவா'ஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கு மட்டும் ட்ரான்ஸ்பாண்டருக்காகக்   கொடுத்த  குத்தகைத் தொகை  ஆயிரம் கோடியை மட்டும் பெற்றுக் கொண்டு  ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்று ஒதுக்கப்படும் அலைக்கற்றையை வேறு யாருக்கும் மேற்கொண்டு விற்கக்கூடாது என்ற விதியும் ஒப்பந்தத்தில் இல்லை.
 
இது போதாதென்று சொன்ன நேரத்தில் செயற்கைக்கோளைச்   செலுத்தாவிடில் இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம்  அந்நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டுமென்பது ஒப்பந்தம். இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனம் ஒப்பந்தம் போட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் வழக்கம் போல சொன்னபடிச் செயற்கைக்கோளைச்   செலுத்தாதால் இப்போது கையைப் பிசைந்து கொண்டுள்ளது. தனக்குப் பதிலாகச் செயற்கைக்கோளைச் செலுத்துமாறு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திடம் பேரம் பேசி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே பரிசோதனை செய்து பார்க்கவும் சிறிது அலைக்கற்றை வழங்கப்பட்டுள்ளது.
 
இப்போது மத்திய கணக்குத் தணிக்கைக் குழு சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன?
 
(1) மதிப்பு மிக்க அலைக்கற்றை வெளிப்படையான ஏல முறை இல்லாமல் விற்கப்பட்டுள்ளது.
(2) பிரதமர், மத்திய அமைச்சரவை ஆகியவற்றுக்கு ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் சொல்லப்படவில்லை.
(3) தனியார் தரும் சொற்பத் தொகைக்காக் பொது நிதியை வைத்து செயற்கைக்கோள்  தயாரிப்பது.
(4) இந்நிறுவனம் இந்த அலைக்கற்றையை  வேறு யாரிடமாவது கைமாற்றி விடாமல் இருக்க ஒப்பந்தத்தில் வழிவகை இல்லாதது.
 
இவ்விவகாரம் வெளிவந்தவுடன் மத்திய அமைச்சரவை இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு இந்திய விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனத்திற்கு  அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்திற்காக மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறது.
 
இந்தியாவில் மத்திய தணிக்கைக் குழு மட்டும்தான் தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறது  போலிருக்கிறது.

2 comments:

உண்மைத்தமிழன் said...

[[[இந்தியாவில் மத்திய தணிக்கைக் குழு மட்டும்தான் தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறது போலிருக்கிறது.]]]

நூற்றுக்கு நூறு உண்மை..! பல தகவல்களைத் திரட்டிச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் இன்றுதான் இது பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். மிக்க நன்றி ஜெகனாதன்..!

Kite said...

வருகைக்கு நன்றி அண்ணே.

Post a Comment