Friday, February 4, 2011

இரயில் கூரையில் பயணிகள்

நாமெல்லாம் விஜயகாந்த் படங்களில் இரயில் மேல் சண்டைக்காட்சிகள் பார்த்திருப்போம். ஓடும் இரயில் கூரையில் மனிதர்கள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது பீஹாரில் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் காட்சி.

என் தந்தை தெற்கு இரயில்வேயில் வேலை செய்ததால் ஒவ்வொரு வருடமும் வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். 1993 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது நேபாள நாட்டுக்குச் சென்றபோது கொல்கத்தாவிலிருந்து பீஹார் வழியே செல்ல நேரிட்டது.

தமிழகத்தில் நாம் பொதுவாக இரயில்கள் சுத்தமாகப் பராமரிக்கப் படுவதில்லை என்று குறை கூறுவோம். பீஹாரில் இன்னும் ஒரு படி மேலே போய் பல பெட்டிகளில் விளக்கு வெளிச்சமே இல்லை. இருட்டான பெட்டிகளில் காடு போன்றிருக்கும் பாதையில் பயணம் செய்வது திகிலான அனுபவம். சரி பெட்டிக்குள்தான் வெளிச்சம் இல்லை என்று வழியில் வரும் ஊர்களில் பார்த்தால் பல ஊர்கள் இருளடைந்து காணப்பட்டன. அதைப் பற்றி விசாரித்தபோது பீஹாரில் பல கிராமங்களில் மின்வசதி கிடையாதென்றும் இருக்கும் இடங்களில் கூட ஒரு நாளில் பாதி நேரம்தான் மின் வினியோகம் இருக்கும் என்றும் அறிந்தோம். நிதீஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிற்பாடுதான் மின் வினியோகத்தில் சிறிது முன்னேற்றம் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் பீஹார் மக்களில் பலர் அவ்வளவு பொது ஒழுக்கம் கடை பிடிப்பவர்களாக இல்லை. இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறிக் கொண்டு முன்பதிவு செய்தவர்கள் இருக்கையைப் பயன்படுத்த விடாமல் தொல்லை செய்வார்கள். பயணச்சீட்டு பரிசோதகரிடம் புகார் செய்தாலும் பயனில்லை. அவரையும் மிரட்டுவார்கள். ஓரளவிற்கு மேல் பேச முடியாமல் அவரும் நம்மைக் கை விட்டு விட்டுக் கிளம்பி விடுவார். இவர்களில் பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்பவர்களே அதிகம். கேட்டால் இது அரசாங்கத்தின் வண்டி. நான் ஏன் காசு கொடுக்க வேண்டுமென்பார்கள்.

உச்ச கட்டமாக சிறு கிராமங்களிலிருந்து சிறு நகரங்களுக்குப் பயணிக்கும் பலர் தங்கள் மிதிவண்டிகளை இரயிலின் ஜன்னல்கள் இடையே கயிற்றைப் போட்டுக் கட்டி விட்டு இரயிலின் கூரைக்கு இடம் பெயர்ந்து விடுவர். பல தடங்கள் மின்மயமாக்கப் படாதது அவர்களுக்கு வசதியாக இருந்தது. இவர்களுக்கு மேற் கூரையில் போய் தேநீர் விற்கும் வியாபாரிகளும் உண்டு

இந்த கூரையில் பயணிக்கும் பழக்கம் பீகாரில் மட்டும்தான் உண்டு என்று எண்ணியிருந்தேன். உத்தர பிரதேசத்தில் இரு நாட்களுக்கு முன்  ஜம்முதாவி விரைவு வண்டியில்  நடந்த ஒரு விபத்து என் நினைப்பைத் தகர்த்தது. புது தில்லியிலிருந்து லக்னோ செல்லும் வழியிலுள்ள ரோசா எனும் இடத்தருகே கூரையில் பயணம் செய்த பதினான்கு இளைஞர்கள் எதிர்ப்பட்ட  பாலத்தில் தலை மோதி மரணமடைந்தனர். கூரையில் பயணம் செய்த பலர் பரேலியில் நடந்த இந்திய-திபெத் எல்லைக்    காவல் பணிக்காகத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். இரயிலில்  இடமில்லாமல் பலர் என்ஜின் முன்புறம் மற்றும் Gaurd பெட்டி ஆகியவற்றிலும் தொற்றிக் கொண்டு பயணம் செய்துள்ளனர்.



ஹிந்து நாளிதழில் இரு நாட்களுக்கு முன் இச்செய்தியைப் பார்த்தபோது ஒரு புறம் வருத்தமாக இருப்பினும் இன்னொரு புறம் இது இவ்வளவு நாள் நடக்காமல் இருந்ததே அதிசயம் என்று தோன்றியது.

No comments:

Post a Comment